இந்திய நாட்டின் 76வது சுதந்திர தின விழா நாளை இந்தியா முழுவதும் கோலாலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும் துரிதமாக செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. ஆகவே பொது இடங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, விமான நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடும் பகுதிகளில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், இந்த மாதம் தொடக்கம் முதலே ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில்தான், இன்று அதிகாலை முதல் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கூடுதல் பாதுகாப்பு நடைமுறை, ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி நள்ளிரவு வரையில் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அத்துடன் பாதுகாப்பு பணியில் இருக்கின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் விடுப்புகள் அனைத்தும், ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு, பணி நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு, இருக்கிறது. அத்துடன், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.