தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக் கூடும். மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதியை ஒட்டி வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக் கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 6-ம் தேதி வரை தமிழ்நாட்டு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஒரு சில இடங்களிலும், உள் தமிழ்நாட்டு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.