பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்..
சர்வதேச செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளது.. கொரோனா காரணமாக 2021-ம் ஆண்டு ஆன்லைனில் நடந்த இந்த போட்டியில் ரஷ்யாவும் இந்தியாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.. இந்த சூழலில் 2022-ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ரஷ்யாவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால் உக்ரைன் மீதான போர் காரணமாக, இந்த ஆண்டுக்கான செஸ் போட்டியை ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது..
2022-ம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் இந்த போட்டி நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.. இந்த சூழலில், நேற்று முன் தினம் முதலமைச்சர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.. கிட்டத்தட்ட 80% பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது..
இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்.. சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வருமாறு பிரதமரிடம் நேரில் அழைப்பு விடுக்க உள்ளார். ஜூலை 28-ம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் பிரம்மாண்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.