Hajj: ஹஜ் யாத்திரையின்போது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் கூட்டம் காரணமாக தற்போது, குழந்தைகளுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் சவுதி அரேபியாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாமியர்கள் குறிக்கோளாக கொண்டு இருக்கின்றனர். அந்தவகையில், 2025ம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கான பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கூட்ட நெரிசலால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள குழந்தைகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
வருடாந்திர ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவிற்கு வரும் யாத்ரீகர்களுக்கான புதிய விதிகளை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தின் போது குழந்தைகள் யாத்ரீகர்களுடன் செல்ல அனுமதி இல்லை என்று அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் கடுமையான கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வளைகுடா செய்திகள் தெரிவிக்கின்றன. “குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், புனித யாத்திரையின் போது அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கான முன்னுரிமை, எப்போதும் போல, புனித யாத்திரை மேற்கொள்ளாதவர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஹஜ் பருவத்திற்கான பதிவு சவுதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு நுசுக் தளம் வழியாக தொடங்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களைச் சரிபார்த்து, தங்கள் பயணத் தோழர்களைப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், உள்நாட்டு யாத்ரீகர்களுக்காக புதிய தவணை அடிப்படையிலான கட்டணத்தை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஹஜ் தொகுப்புக்கு மூன்று தவணைகளில் பணம் செலுத்தலாம்: முன்பதிவு செய்த 72 மணி நேரத்திற்குள் 20% வைப்புத்தொகை, அதைத் தொடர்ந்து ரமலான் 20 மற்றும் ஷவ்வால் 20 க்குள் 40% என்ற இரண்டு சமமான கொடுப்பனவுளை மேற்கொள்ளலாம்.
கடந்த மாதம், சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஜெட்டாவில் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், வரவிருக்கும் ஹஜ் பருவத்திற்காக இந்தியாவிலிருந்து 175,025 யாத்ரீகர்களின் ஒதுக்கீட்டை மத்திய அரசு பெற்றது.
ஆண்டுதோறும் கடும் கூட்ட நெரிசல், அதிகப்படியான வெயிலின் தாக்கம் போன்ற காரணங்களால் ஹஜ் பயணத்தின் போது கூட ஏராளமானோர் உயிரிழந்து, சாலையோரங்களில் விழுந்து கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகின. மேலும் இந்த கூட்டத்தில் பலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்த இம்முறை சவுதி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சவுதி அரேபியாவின் புதிய விசா விதிகளால் பாதிக்கப்படும் நாடுகள் : அல்ஜீரியா, பங்களாதேஷ், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, பாகிஸ்தான், சூடான், துனிசியா மற்றும் ஏமன். இந்த நாடுகளுடனான சுற்றுலா, வணிகம் மற்றும் குடும்ப வருகைகளுக்கான ஒரு வருட பல நுழைவு விசாக்களை சவுதி அரேபிய அரசாங்கம் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது. புதிய விதிகளின் கீழ், இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒற்றை நுழைவு விசாவிற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும், இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.