இன்று முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்து 13,036 பேர் எழுதுகின்றனர். இதில் 12,480 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 87,148 மாணவர்கள், 25,888 தனித்தேர்வர்கள் மற்றும் 272சிறை கைதிகளும் தேர்வு எழுத உள்ளனர்.
இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உட்பட மின்சாதன பொருட்கள் கொண்டுவர தடை உள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் செயல்பட வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனா கொண்டு எழுதக்கூடாது. அதேபோல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகியவற்றை குறிப்பிட கூடாது. மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். மேலும் அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.
பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். தொடர்ந்து விடைத்தாள் திருத்துதல் பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும்.