கரூர் மாவட்ட பகுதியில் வில்லாபாளையத்தில் குணசேகரன் மகனான அரவிந்த் சபரி(18) எனபவர் வசித்து வருகிறார். இவர் அரவக்குறிச்சி பகுதியில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்றைய தினத்தில் கல்லூரிக்கு சென்று செமஸ்டர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டைப் பெறுவதற்காக சபரி சென்றுள்ளார். கல்லூரியிலேயே , அரவிந்த் சபரி புகையிலை பொருட்களை உபயோகித்ததாக தெரியவந்துள்ளது.
இதனால் கல்லுாரி நிர்வாகம் பெற்றோரை அழைத்து வரும்படி அரவிந்த் சபரியிடம் கல்லூரி நிர்வாகத்தினர் சொல்லியுள்ளனர். இவர்கள் இவ்வாறு கூறியதால் மனமுடைந்த சபரி, கல்லூரியின் 3வது மாடிக்கு சென்று திடீரென , அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.
இதனை பார்த்த சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.