அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
தென் மேற்கு அரபிக் கடலில் உருவாகிய தேஜ் புயல் தீவிர புயலாக வலுவடைந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து மிகத் தீவிர புயலாக வலுவடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.