சிறைபிடிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகை ரூ.350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஜூலை 26 அன்று தலைமைச் செயலகத்தில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் குறித்தும், இதனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை எடுத்துரைத்தும், தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது, மீனவ சங்கப் பிரதிதிகள் பாம்பன் தூக்குப்பாலம் அருகே கால்வாய் தூர்வார வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 87 மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 175 படகுகளையும் மீட்டுத்தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மீனவசங்க பிரதிநிதிகள் முதல்வரிடம் கேட்டுக்கொண்டனர்.
மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலித்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு தின உதவி தொகையாக தற்போது நாளொன்றுக்கு 250 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திட தின உதவித் தொகையினை நாளொன்றுக்கு 350 ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.