வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில்; வருமான வரி சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரி சட்டம், 1961 பிரிவு 12 ஏபி/80ஜி/10(23சி)/35(1) யின் கீழ் பதிவு/ அங்கீகாரம் பெறுவதில் நிதிச்சட்டம் 2020 மற்றும் 2021 புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய நடைமுறைகளின் படி, வருமான வரிச்சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவாகியுள்ள அறக்கட்டளைகள் 31-03-2022 அல்லது அதற்கு முன்பாக மின்னணு வழியே படிவம் 10ஏ கட்டாயம் தாக்கல் செய்து மறு பதிவு செய்திருக்கவேண்டும். அவ்வாறு மறுபதிவு செய்ய தவறிய அறக்கட்டளைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் வரி விலக்கு ரத்து செய்யப்படலாம்.
புதிய நடைமுறைகளுக்கு மாறுவதில் சில இடைஞ்சல்கள் காரணமாக பல அறக்கட்டளைகள் 31-03-2022 க்குள் மறுபதிவு செய்வதற்கான படிவம் 10ஏ தாக்கல் செய்ய இயலவில்லை என்று மத்திய நேரடி வரி வாரியத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக அறக்கட்டளைகளின் நியாயமான இன்னல்களை களையும் பொருட்டு, 01-11-2022 அன்று ம.நே.வ.வாரியம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி படிவம் 10ஏ தாக்கல் செய்ய வசதியாக 25-11-2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின் படி 31-03-2022க்குள் மறுபதிவு செய்ய தவறிய அறக்கட்டளைகள் 25-11-2022 ம் தேதிக்குள் மின்னணு வழியில் படிவம் 10ஏ தாக்கல் செய்யும் அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். அவ்வாறு மறுபதிவு செய்துகொள்வதன் மூலம் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிவிலக்கு வசதியை இழக்காமல் தக்க வைத்துக்கொள்ளலாம்.