ஒருங்கிணைந்த 5 ஆண்டு மேலாண்மைப் படிப்புகளுக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 26-ம் தேதி மதியம் 3 முதல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 11-ல் தொடங்கி மார்ச் 10-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் exams.nta.ac.in/JIPMAT என்ற வலைதளம் மூலம் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதவிர விண்ணப்பக் கட்டணத்தை மார்ச் 18-ம் தேதி வரை செலுத்தலாம். அதைத்தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மார்ச் 19 முதல் 21-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர பாடத்திட்டம், கட்டணம், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது jipmat@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.