கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் உமா கார்கி பாரதிய ஜனதா கட்சியின் சமூக வலைதள செயல்பாட்டாளரான இவர் சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதேபோல திமுக, பெரியார், மணியம்மை நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக உமா கார்க்கி தொடர்ந்து, அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக கோவை மாநகர சைபர் துறையின் காவல்துறையில் கோவை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரிஷ் கடந்த திங்கள்கிழமை புகார் வழங்கினார்.
அதன் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் 2 மதத்தினர் இடையே மோதல் ஏற்படுத்த முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட உமா கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது இத்தகைய நிலையில், தான் உமாவை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல்துறையினர் 2 நாள் கோரிய நிலையில், இன்று மாலை 5 மணி வரையில் விசாரிப்பதற்கு கோவை நீதிமன்றத்தில் அனுமதி வழங்கி இருக்கிறது.