முதலமைச்சர் முக.ஸ்டாலின் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 11ஆம் தேதி வட சென்னை பகுதியில் பல்வேறு தெருக்களில் தமிழக முதலமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிகை பெயரில் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம், ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார், சுவரொட்டியை ஒட்டிய பிலிப்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்துள்ளார். பின்னர், முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார். அவ்வாறு எச்சரித்தும் சுவரொட்டிகளை ஒட்டியதால் பிலிப்ராஜ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
![முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்..! அண்ணாமலையின் உதவியாளர் கைது..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/Stalin-Letter.jpg)
இதனையடுத்து போஸ்டர் ஒட்டும் வேலையை செய்யும் பிலிப்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கடந்த 2000 ஆண்டு கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. பிலிப்ஸ் ராஜிடம் இருந்து ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் மற்றும் இருசக்கர வாகனம் செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போஸ்டரை யார் ஒட்ட சொன்னார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பிலிப்ஸ் ராஜை விசாரணை மேற்கொண்டதில், இந்து ஜனநாயக முன்னணியின் சென்னை மாநகரச் செயலாளர் சத்தியநாதன் என்பவர் போஸ்டர்களை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சத்யநாதனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
![முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்..! அண்ணாமலையின் உதவியாளர் கைது..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/image_380x226_632bb7613c272.jpg)
அதனைத் தொடர்ந்து பறையர் பேரியக்க தலைவர் சிவகுருநாதன் சத்தியநானிடம் போஸ்டர்களை சென்னையில் ஒட்ட கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனால் சிவகுருநாதனையும் போலீசார் கைது செய்தனர். சிவகுருநாதன் சிவகாசியில் தனியார் அச்சகத்தில் 5,000 போஸ்டர்களை அடித்து கொரியர் மூலம் சென்னை கொண்டு வந்து வழக்கறிஞர்கள் இருவர் மூலம் சத்தியநாதன் மற்றும் பிலிப்ஸ் ராஜ் வைத்து சென்னையில் சுவரொட்டிகளை ஒட்டியது தெரியவந்தது. மேலும், இதுபோன்று சுவரொட்டிகளை ஒட்டுமாறு கூறிய நபர் யார் என கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதாக விசாரணையில் தெரியவந்தது.
![முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்..! அண்ணாமலையின் உதவியாளர் கைது..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/05/Annamalai-1024x576.jpg)
இந்நிலையில், ஜூனியர் விகடன் பத்திரிகையில் அண்ணாமலையை பற்றி கார்ட்டூன் சித்திரம் வெளியானது போல், தமிழக முதல்வரையும் பற்றி அவதூறு பரப்பும் வகையில் வாசகம் மற்றும் கார்ட்டூன்களை சித்தரித்து கிருஷ்ணகுமார் முருகன், சிவகுருநாதனுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதற்காக 35 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சிவகுருநாதனுக்கு கிருஷ்ணகுமார் முருகனுக்கு கொடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே சிவகுருநாதன், சத்தியநாதன், பிலிப்ஸ் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த பாஜக ஆதரவாளரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளருமான கிருஷ்ணகுமார் முருகனை போலீசார் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.