இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மக்கள் வந்து தரிசனம் செய்யும் இடமாக ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் இருக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு பல ஆயிரம் மக்கள் வந்து செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்திருக்கும் சேஷாசலம் வனப்பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம், மலைப்பாதையில் 6 வயது சிறுமி சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி மலைப்பாதையில் நடந்து செல்பவர்களை வனவிலங்குகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்ததால் பக்தர்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து, கூண்டுகள் வைத்து சிறுத்தைகளை பிடிக்கும் பணியை மேற்கொண்டது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதற்கிடையே, திருமலைக்கு மலையேறி செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கியது தேவஸ்தான நிர்வாகம்.
இந்நிலையில் தற்போது கண்காணிப்புகேமராக்களில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் தென்பட்டதை அடுத்து, மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்கள், தனித் தனியாக வராமல் குழுவாக வருமாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நரசிம்மர் கோயில் பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் தென்பட்டதை அடுத்து தேவஸ்தானம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.