புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்துள்ள வெள்ளகொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி( 50) திமுக பிரமுகரான இவர் விவசாயம் செய்து வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வயலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் ரவியை தீவிரமாக தேடி பார்த்துள்ளனர். அப்போது உடலில் ரத்த காயங்களுடன் கிணற்றில் சடலமாக கிடந்திருக்கிறார் ரவி.
ஆகவே ரவியை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை கொண்டால் மட்டுமே அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புவோம் என்று தெரிவித்து அவருடைய உறவினர்கள் சுமார் 3 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவல் வழங்கப்பட்டு கந்தர்ப்பக்கோட்டை சட்டசபை உறுப்பினர் சின்னதுரை சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனை அடிப்படையாகக் கொண்டு, ரவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக ரவியின் நிலத்தை கேட்டு அருகில் நிலம் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகவும், ஆனாலும் அதற்கு ரதி மறுப்பு தெரிவித்து வந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். அதோடு, கொலை குறித்து சிலரின் பெயர்களை குறிப்பிட்டு ரவியின் உறவினர்கள் புகார் வழங்கி இருக்கின்ற நிலையில், ரவியின் மரணத்தை மர்மமான மரணம் என்றில்லாமல் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
அதோடு ரவியின் கொலை குறித்து உறவினர்கள் குறிப்பிட்ட நபர்கள் அரசியல் பின்புலம் இருப்பவர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் தயங்கி வருவதாக தெரிவித்து ரவியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மறுபடியும் போராட்டத்தில் குதித்தனர். இது குறித்து காவல்துறையினர் தரப்பில் தெரிவித்ததாவது, ரவியின் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவரது மரணம் தொடர்பாக தெளிவான முடிவுக்கு வர இயலும். ரவி கொலை செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடும் பட்சத்தில், நிச்சயமாக இது கொலை வழக்காக மாற்றப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்திருக்கின்றனர் ஆனாலும் ரவியின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.