பழக்கடைகளில் ரசாயனம் பயன்படுத்துவதாக பொதுமக்களுக்கு சந்தேகம் வந்தால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”வரும் நாட்களில் கோடை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தீவிர தலைவலி, மயக்கம், படபடப்பு, தசை பிடிப்பு வலி, சுயநினைவு இழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் வெளியில் செல்லும்போது தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும் எனவும் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
இளநீர், தர்பூசணி, கிர்ணி பழச்சாறுகள், மோர் உள்ளிட்டவற்றை பருக வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். மதுபானம், டீ , காபி, கார்போஹைட்ரேட் செய்யப்பட்ட குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் பழக்கடைகளில் ரசாயனம் பயன்படுத்துவதாக பொதுமக்களுக்கு சந்தேகம் வந்தால் உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்” என தெரிவித்தார்.