இன்றைய காலத்து இளைஞர்கள் லைக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக கிறுக்குத்தனமாக பல செயல்களை செய்கின்றனர். அவை பல நேரங்களில் ஆபத்திலும் முடிந்துவிடுகின்றனர். இதனால் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதை உணர்வதே இல்லை.
பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும் கல்லூரி மாணவர் பரத் (வயது 22). இவர், கடந்த 20 நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் புதுச்சேரி மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்தவர், புதுச்சேரி கடை வீதியில் பச்சை குத்தும் கடைக்கு சென்று தனது கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டூ குத்திக் கொண்டுள்ளார்.
சுற்றுலா முடிந்து சொந்த ஊர் திரும்பிய மாணவன் பரத், வயல் வெளியில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பச்சை குத்திய பகுதியில் புண் ஏற்பட்டு நரம்பு பாதிக்கப்பட்டு அவரது அக்குளில் நெரிக்கட்டி உருவானது. இது நாளடைவில் பரத்திற்கு கழுத்தில் கட்டி பெரிதாகி கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பரத்தை அவரது குடும்பத்தினர், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர், சீழ்பிடித்திருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், இருந்த பரத்தை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள், டாட்டூ குத்தியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பில் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. இதனால் அவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டுவிட்டது. தற்போதைய உடல்நிலை சிகிச்சையை ஏற்காது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே பரத் உயிரிழந்தார். இச்சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.