ஜூசில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு அதை வீடியோவாக எடுத்து, அடிக்கடி பலாத்காரம் செய்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே பரவூர் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது சுபைர் (36). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை அணுகி ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் சுபைருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணை தொடர்பு கொண்ட சுபைர், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதை நம்பி அந்த இளம்பெண்ணும் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது, சுபைர் மயக்க மருந்து கொடுத்த ஜூஸை அந்த இளம்பெண்ணுக்கு கொடுத்துள்ளார்.
ஜூஸை குடித்து சிறிது நேரத்தில் அந்த இளம்பெண் மயக்கமடைந்தார். இதையடுத்து, சுபைர் அந்த இளம்பெண்ணை ஓட்டல் அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதனை செல்போனில் போட்டோ மற்றும் வீடியோவும் எடுத்து வைத்துள்ளார். இந்த வீடியோவை காட்டி மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளார். தான் தற்போது கர்ப்பிணியாக இருப்பதாக கூறியும் சுபைர் அவரை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் இவரது தொல்லை தாங்க முடியாததால் பொறுமை இழந்த இளம்பெண், பரவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த காமக்கொடூரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.