முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த ஆசிரியருமான டாக்டர். ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், 390 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது நேற்று வழங்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருதுகளை வழங்கினார்.
இந்நிலையில், விழாவில் பேசிய அவர், எங்கு சென்றாலும், எப்போது பார்த்தாலும் ‘எமிஸ்’ பணிகள் அதிகமாக இருக்கின்றன. கற்பித்தலில் கவனம் செலுத்த முடிவதில்லை என்று ஆசிரியர்கள் சொல்கின்றனர். எப்போதும் அரசுப் பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடிப்பது என்னுடைய வழக்கம். அப்படி ஒரு முறை சென்றபோது, மதுரையில் மரத்துக்கு அடியில் ஆசிரியர் ஒருவர் போனை வைத்துக்கொண்டு, காத்திருப்பதைப் பார்த்தேன். அவரிடம் என்ன சார், செல்ஃபி எடுக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அவர், ‘எமிஸ்’ பணிக்காக இங்கே நிற்கிறேன். டவர் இல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது என்றார். இவை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு கலந்து ஆலோசித்தோம்.
ஒரு மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள். இனி எமிஸ் வருகைப் பதிவேட்டை மட்டும் ஆசிரியர்கள் பதிவிட்டால் போதும் என்று தெரிவிக்கிறேன். EMIS திட்டம் (Educational Management Information System) மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான புள்ளி விவரங்களை பிஆர்டி மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்னும் ஒரே மாதத்தில் இது செயல்படுத்தப்படும்
ஆசிரியர்களிடையே பல்வேறு கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று தெரியும். ஒவ்வொரு கோரிக்கையும் படிப்படியாக நிறைவேற்றப்படும். இந்திய அளவில் தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித்துறை 2-வது இடத்தில் உள்ளது. இதை முதல் இடத்திற்குக் கொண்டு செல்ல ஆசிரியர்கள் அனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டும்” என்று கூறினார்.