மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி, இன்று துவங்குகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு. வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர்.
சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட / வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி, இன்று துவங்குகிறது.
இன்று முதல் 20.10.2023 வரை நடைபெறும் இக்கண்காட்சியில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களான பட்டு பருத்தி ஆடைகள். மண்பாண்டப் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பல்வேறு உலோகங்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள். தரமான வீட்டு உபயோகப் பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பல்வேறு தோல் பொருட்கள், நவராத்திரி கொலு பொம்மைகள், வாசனைப் பொருட்கள், மரச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், மூலிகைப் பொருட்கள், பாரம்பரிய கிராமிய உணவு வகைகள் உள்ளிட்ட வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு குறிப்பாக அறுசுவை மிகுந்த பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கென தனி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.