பி.எம். கிசான் திட்டத்தில் பயனடைந்து வரும் சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வருகின்ற 10.09.2023-க்குள் இ.கே.ஓய்சி (eKYC) அப்டேட் செய்திட வேண்டும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை விவசாயிகள் பி.எம்.கிசான் (PMKISAN) திட்டத்தில் சேர்ந்த நாளிலிருந்து 1 முதல் 14 தவணைகள் வரை தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. e-KYC என்பது மின்னணு முறையில் உங்கள் வாடிக்கையாளரை அல்லது விவசாயியை தெரிந்து கொள்ளுங்கள் என்பதன் சுருக்கம் ஆகும். ஆகவே பி.எம்.கிசான் திட்டத்தில் இ.கே.ஓய்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 15-வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். இதன்படி முதல் வழிமுறையாக தங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் www.pmkisan.gov.in தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஒ.டி.பி.மூலம் சரி பார்த்திடலாம்.
இரண்டாம் வழிமுறையானது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல்ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபார்த்திடலாம்.
மூன்றாவது வழிமுறை என்பது பி.எம்.கிசான் செயலி மூலமாக முக அடையாளம் கொண்டு இகே.ஒய்.சி செய்யலாம். மேலும் அருகிலுள்ள இந்தியா போஸ்ட்பேமண்ட் பேங்க் கிளையை அணுகி ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகள் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் திட்ட வலைதளத்தில் இ.கே.ஒய்.சி செய்திட வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் 15வது தவணை தொகை பெறுவதற்கு 13,170 பயனாளிகள் e-KYC அப்டேட் செய்திடாமல் உள்ளனர். நிலுவையில் உள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி மேற்குறிப்பிட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து இத்திட்டத்தில் பயனடை வேண்டும்.