எந்த ஒரு அரசியல் மாநாடு, ஊர்வலம் மற்றும் திருமணம் உள்ளிட்ட நாட்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இப்பொழுதே பட்டாசுகள் விற்பனை ஆங்காஙே கலைகட்டத் தொடங்கியுள்ளது. சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு பட்டாசுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக பல இடங்களில் பட்டாசு வெடிவிபத்துகளும் அதிகளவில் நிகழ்கின்றன. அதன் ஒருபகுதியாக கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழக – கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் நிகழ்ந்த பட்டாசு வெடிவிபத்தில் 14 பேர் உடல் கருகி பலியாகினர். இந்தநிலையில், பட்டாசு வெடிக்க கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது பண்டிகை நாட்களிலோ பட்டாசுகள் வெடிப்பது வழக்கமான ஒன்று தான். இனிமேல் கர்நாடகா முழுவதும் எந்த ஒரு அரசியல் மாநாடு, ஊர்வலம் மற்றும் திருமணம் உள்ளிட்ட நாட்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்க விரும்பும் மக்கள், பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மேலும் விற்பனையாளர்கள் மாநிலம் முழுவதும் பசுமை பட்டாசுகளையே விற்பனை செய்ய வேண்டும். இதை தவிர்த்து வேறு பட்டாசுகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.