ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச்சண்டை நடத்தப்பட்டு வருகிறது. ஊடுருவும் பயங்கரவாதிகள் பலர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள சோட்டிகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.
நீண்ட நேரமாக இருதரப்பினருக்குமிடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த துப்பாக்கிச்சண்டையின் போது 2 தீவிரவாதிகள் பிடிப்பட்டதாகவும், தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் சோபியான் போலீஸ், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.