ரஷ்யாவை சேர்ந்த தாய் தனது மூன்று குழந்தைகளின் பிணங்களுடன் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தாயிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவர் கூறிய வாக்குமூலம் காவல்துறையையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பில் குழந்தைகளின் பிணங்களுடன் பெண் ஒருவர் வசித்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த குடியிருப்பிற்கு சென்று சோதனை நடத்தியதில் அழுகிய நிலையில் இருந்த மூன்று குழந்தைகளின் பிணங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக தரியா என்ற 34 வயது பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தன்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்காக அரசாங்கத்திடமிருந்து நிதி பெறுவதற்காக தனது குழந்தைகளின் இறப்பை மறைத்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அவர் வாழ்ந்து வரும் வீடும் அரசாங்கத்தின் நிதியின் மூலம் வாங்கப்பட்டது என விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஐந்து குழந்தைகளுக்கு தாயான அந்த பெண் தனது ஒரு குழந்தையின் பிறப்பையும் அரசாங்க பதிவில் இருந்து மறைத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
அந்தப் பெண்ணின் 12 வயது மூத்த மகன் தனது பாட்டியிடம் வளர்ந்து வருகிறார். அவர் தனது தாயையும் சகோதர சகோதரிகளையும் பார்ப்பதற்காக தாயின் குடியிருப்புக்கு சென்ற போது இறந்த குழந்தைகளின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இது தொடர்பாக தனது பாட்டியிடம் தகவல் தெரிவிக்கவே அவரது பாட்டி காவல்துறையில் புகார் செய்துள்ளார். மேலும் அந்தப் பெண்மணியின் வீட்டில் இருந்து ஐந்து வயது குழந்தை ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறது. இறந்த குழந்தைகளில் 4 வயது குழந்தை ஒன்றும் 8 வயது குழந்தை ஒன்றும் அடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.