இலவசங்களும் சமூக நல திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்..
அஸ்வினி உபாத்யாயா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ ஏராளமான அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கின்றன.. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் இதுபோன்ற இலவச வாக்குறுதிகளை வழங்குவதாகவும், எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன, ஏன் மத்திய அரசு இதில் உறுதியான முடிவெடுக்க தயங்குகிறது என்று நீதிபதி கேள்வி எழுப்பினர்.. மேலும் தேர்தல் இலவசம் குறித்து முடிவெடுக்க உயர்மட்ட குழு தேவை என்றும், நிபுணர் குழு அமைப்பது குறித்து ஏழு நாட்களுக்குள் தங்கள் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மற்றும் மனுதாரர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதி என்.வி. ரமணா “ இலவசங்களும் சமூக நல திட்டங்களும் வெவ்வேறானவை.. இலவசங்களால் அரசு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.. இலவசத்தால் மின்சாரத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் முன்னர், மாநில பொருளாதார நிலை என்ன என்பது பற்றி தெரியாது.. ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தவறுகளை செய்யக்கூடாது.. இலவச விவகாரத்தில் பல காரணிகள் இருந்தாலும் உலக நாடுகளை போல் பொருளாதா ஒழுங்கு ஏற்படுத்த வேண்டும்.. ” என்று தெரிவித்தார்..
இதை தொடர்ந்து இலவச அறிவிப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பு வாதிட்டது.. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது..