திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள குன்னுவரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலன் (24). சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகளை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கபிலன் காதலித்த பெண், அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் இதனை மணிகண்டன் கண்டித்துள்ளார். இருப்பினும் கபிலன் தன் காதலை கைவிட மறுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில், தனது காதலியைப் பார்ப்பதற்காக கபிலன் அவரது காதலி வீட்டுக்குச் சென்றுள்ளார். எத்தனை சொன்னாலும் கேட்காத கபிலனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே அன்று வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து கபிலனை சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளார்.
இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த கபிலனை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கபிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விருவீடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை போலீஸார் தேடி வருகின்றனர். வத்தலக்குண்டு அருகே காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த காதலியின் தந்தை கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more ; இப்படியும் ஒரு அரசா… இஸ்லாமியர்கள் வேறு மதத்தினருடன் பழக கூடாது..!! அத்துமீறும் தாலிபான்களின் ஆதிக்கம்..!!