உள்ளாட்சிகள் தினத்தையொட்டி இன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றபேரவை விதி எண் 110-ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அதன்படி, இன்று உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இன்று அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும்.
மேலும், முக்கிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்படும்.