நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் சசிகுமார். இவர், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் தவணை வசூலிக்கும் முகவராக வேலை செய்து வந்தார். கடந்த பிப்.26ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்ற சசிகுமார், இரவு 10 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பெற்றோர் அவருக்கு தொடர்பு கொண்டபோது, இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், நள்ளிரவைக் கடந்த பிறகும் அவர் வீட்டுக்கு வரவில்லை. மறுநாள் அந்த ஊரின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சசிகுமார் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார், அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சசிகுமாருக்கு பெண்கள் சிலருடன் இருந்த தவறான தொடர்பால் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. திருமணம் ஆகாத சசிகுமார், நிதி நிறுவனத்திலும் வங்கியிலும் கடன் வாங்கித் தருவதாகப் பல பெண்களைத் தனது வலையில் விழ வைத்துள்ளார். அவர்களுடன் முறையற்ற உறவில் இருந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகக் குறிப்பிட்ட பெண் ஒருவருடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார். இதையறிந்த அந்தப் பெண்ணின் கணவர், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து எச்சரித்துள்ளார். ஆனால், அதன் பிறகும் அவர்கள் தொடர்பைக் கைவிடாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணவர், சசிகுமாரை கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சசிகுமாருடன் தொலைபேசியில் பேசியவர்கள் யார் யார் என்ற விவரங்களைக் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். அந்த எண்களுடன் தொடர்பு கொண்டும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.