நவம்பர் 19ம் தேதி தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளது. எனவே 19ம் தேதி மற்றம் 20ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த வாரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று அரபிக்கடல் நோக்கி சென்றது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்துவாங்கியது. சீர்காழி உள்ளிட்ட இடங்களில் இன்னமும் வெள்ள நீர் வெளியே செல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக வரும் நவம்பர் 19,20 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 19ம் தேதி மீண்டும் மழை தொடங்கும் மழை படிப்படியாக தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் இருந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு 18ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.