இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பொழிந்து வருவதால், அந்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில், நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அங்கே பலர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் வீடுகளை இழந்து, தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவி புரிய அந்த மாநில அரசும் துரிதமாக செயல்பட்டு வருகிறது.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர், அந்த மாநில முதல்வரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, ஆய்வு செய்து, அந்த பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இந்த நிலையில் தான், தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்தே வட மாநிலங்களில் கனமழை அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக, இமயமலை பகுதியில் அமைந்திருக்கின்ற இமாச்சலப் பிரதேசத்தில், மழை சற்று கொடூரமான முறையில் தான் பொழிந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், உத்தரகாண்ட் மாநிலத்திலும், தென்மேற்கு பருவமழையால், அதிக பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில் தான், கடந்த சில தினங்களாக, இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பொழிந்திருக்கிறது. மேக வெடிப்பு உண்டாக்கி, அதிக கன மழை பொழிந்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை அந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லாவில் இருக்கின்ற சம்மர்ஹில் பகுதியில், இருக்கின்ற ஒரு சிவன் கோவில் இடிந்து விழுந்தது. அதேபோல, பாக்லி பகுதியில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததாக கூறப்படுகிறது.
மேலும், பல பகுதிகளிலும் இடிபாடுகளை தோண்டி பார்க்க, பார்க்க பிணங்கள் அதிக அளவில் மீட்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில், சம்மர்ஹில் பகுதியில், கோவில் இடிபாடுகளில் இருந்து, இதுவரையில் 13 உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. அதேபோல பாக்லி பகுதியில் வீடுகளின் இடிபாடுகளில் இருந்து ஏழு உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.
அதோடு, இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்காக, முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் தொடர்ந்து, கனமழை கொட்டி தீர்த்து வருவது மட்டுமல்லாமல், அந்த கனமழையின் காரணமாக, இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் மீண்டும், மீண்டும் நிலச்சரிவு உண்டாகி வருகிறது.
இதற்கு நடுவே மாநிலத்தில் இன்னும் சில நாட்களுக்கு கன மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளையும் மூட, அந்த மாநில கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இப்படியான சூழ்நிலையில் தான், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, அந்த மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் ஹெலிகாப்டர் மூலமாக சென்று பார்வையிட்டார்.
அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், இமாச்சலப் பிரதேசத்தில் இந்த பருவமழை ஆரம்பித்தது முதல், இதுவரையில், 170 மேக வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறினார். அதோடு, நிலச்சரிவுகளால், 9600 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்திருக்கின்றன என்றும், கடந்த மூன்று நாட்களில் மட்டும், இயல்பை விட, 157 சதவீதம் கனமழை பெய்து இருக்கிறது என்று கூறியுள்ளார். அதோடு, கனமழையால், 800க்கும் அதிகமான சாலைகள் துண்டிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
மேலும், இமாச்சலப் பிரதேசத்தில், கடந்த மூன்று தினங்களில், கன மழை குறித்த சம்பவங்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்து இருக்கிறது. மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்களால், பாதித்த பகுதிகளில், முழு வீச்சில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் சிம்லாவில், மீட்புபணிகளுக்காக ராணுவம் களம் இறக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதோடு, கனமழையால், மாநிலத்திற்கு இதுவரையில் பத்தாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. மாநிலத்தின் உள்கட்டமைப்பை மறுபடியும் மேம்படுத்துவதற்கு, ஒரு வருடகாலம் தேவைப்படலாம் என்று கூறியிருக்கிறார்.