பெண் ஒருவருக்கு அவருடைய விவசாய நிலத்தில் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் கிடைத்தது தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் மழைக்காலத்தின் போது விவசாய நிலையங்களில் வைரம் கிடைப்பது வழக்கம். இதனால் மழை பெய்ய துவங்கியவுடன் கிராம மக்கள் விளைநிலங்களில் வைர வேட்டையில் ஈடுபடுவர். வட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் மழைக்காலத்தில் கர்னூல் மாவட்டத்திற்கு வந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் வைரத்தை ரகசியமாக வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜே எறகுடி கிராமத்தைச் சேர்ந்த பெண்
ஒருவருக்கு அவருடைய விவசாய நிலத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரம்
ஒன்று கிடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வைரத்தை வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து மிகவும் குறைந்த விலைக்கு 12 லட்சம் ரூபாய்க்கு வாங்கி சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பழங்காலம் முதலே ஆந்திராவின் ராயல் சீமா பகுதியில் இது போல் விளைநிலங்களில் வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள் கிடைப்பதால் இந்த பகுதிக்கு ராயலசீமா ரத்தனால சீமா என்ற பெயரும் உள்ளது.