உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் உடலுக்கு வேண்டிய சத்துக்களைப் பெற சத்து மாவு தயாரிக்கப்பட்டு உட்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அந்த சத்து மாவு கடைகளில் பாக்கெட் போட்டு விற்கப்பட்டு வருகிறது. சத்து மாவை வளரும் குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது மிகவும் நல்லது. இதை பெரியோர்களும் சாப்பிடலாம். .
உங்களுக்கு வீட்டிலேயே சத்து மாவு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பச்சை பயறு – 1/2 கப், தினை – 1/2 கப், உளுத்தம் பருப்பு – 1/4 கப், கொள்ளு – 1/2 கப், கைக்குத்தல் அரிசி – 1/4 கப், பொட்டுக்கடலை – 1/2 கப் ,கோதுமை மாவு – 1/2 கப், ராகி மாவு – 1/2 கப், மக்கா சோளம் – 1/2 கப், வேர்க்கடலை – 1/4 கப், முந்திரி – 1/4 கப், பாதாம் – 1/4 கப், ஏலக்காய் – 10, சுக்கு பொடி – 2 டீஸ்பூன், தண்ணீர் அல்லது பால் – 2 கப், சர்க்கரை – சுவைக்கேற்ப
செய்முறை: முதலில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றைத் தவிர, மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு குளிர வைக்க வேண்டும். வறுத்த பொருட்கள் நன்கு குளிர்ந்ததும், பிளெண்டர் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்பு அதே அடுப்பில் வைத்து, அதில் பொட்டுக்கடலை, முந்திரி, வேர்க்கடலை, பாதாம் மற்றும் ஏலக்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, அதையும் மிக்சர் ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து பொடி செய்து, அதை அரைத்து வைத்துள்ள பொடியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சுக்கு பொடியை சேர்த்து, அனைத்து பொடிகளையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு கலந்து வைத்துள்ள பொடியை சல்லடையால் சலித்து, காற்றுப்புகாத ஒரு கண்டெய்னரில் போட்டு சேகரித்துக் கொண்டால், சத்து மாவு தயார்.