தெலங்கானா மாநிலம் மஞ்சரியாலா மாவட்டம் சென்னூரு மண்டலம் கிஷ்டம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் போஷம். இவர், கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கரம்மா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர் வழக்கம் போல் பணிக்குசென்றுவிட்டு வந்ததும் போஷம் தனது மனைவியிடம் கோழி கறி குழம்பு வைக்க வேண்டும் என தெரிவித்துவிட்டு வெளியே சென்றுள்ளார். வெளியில் சென்று மது போதையில் வீட்டிற்கு வந்த போஷம், சாப்பிடுவதற்காக கோழிக்கறி குழம்பு கேட்டுள்ளார்.
ஆனால், சங்கரம்மா கத்தரிக்காய் குழம்பு ஊற்றியதால் அவர் ஆத்திரம் அடைந்தார். இதனால் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நள்ளிரவில் சங்கரம்மா வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து சங்கரம்மா தலையில் பலமாக வெட்டியுள்ளார் போஷம். இதில் தலை இரண்டாக பிளந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சங்கரம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி வெட்டிக் கொலை செய்த பிறகு போஷம் அங்கிருந்து தப்பி சென்றார்.
காலை நீண்ட நேரம் ஆகியும் சங்கரம்மா வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சங்கரம்மாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள போஷத்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.