மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் கந்து. 35வயதான இந்த இளைஞர் கூட்டாளியுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரில் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு ரத்திலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கந்து , அவரின் நண்பர் மீதான குற்றங்களை அரசு தரப்பினால் நிரூபிக்க முடியாததால் இரண்டு வருட சிறை வாழ்க்கைக்கு பின்னர் இருவரையும் நீதிமன்றம் விடுவித்தது.
இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த கந்து, தன் மீது போலி மற்றும் இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும். போலி குற்றச்சாட்டுகளால் தன் வாழ்க்கை பாழாகிவிட்டதாகவும், தொழில் மற்றும் வேலை இழப்பு, வாழ்க்கையில் முன்னேற்றம் இழப்பு ஆகிய 6 காரணங்களுக்காக தலா 1 கோடி ரூபாய் என மொத்தம் 6 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், போலி வழக்கால் 666 நாட்கள் சிறை சென்றதால் மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் இழந்ததற்காக மத்திய பிரதேச அரசு தனக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது