என்னை மிரட்டி பார்க்கும் ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிட்டால் ஓபிஎஸ் வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான ஆர்.பி.உதயகுமா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “மதுரை அரசு சட்டக்கல்லூரியில் நான் பயின்றபோது ஜெயலலிதாவுக்காக செமஸ்டர் தேர்வு எழுதாமல் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றேன். இது ஜெயலலிதாவின் கவனத்திற்கு சென்ற போது எனக்கு மாணவர் அணிச் செயலாளர் பதவி வழங்கினார். தொடர்ந்து இந்த இயக்கத்தின் 50 ஆண்டுகால விழா வரலாற்றில் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டு மாணவரணி செயலாளர், இளைஞர் அணி செயலாளர், பேரவை செயலாளர் என்று 3 அணிகளுக்கும் சிறப்பாக பணியாற்றிய அதிமுக தொண்டன் என்ற பெருமையை எனக்கு தந்தவர் ஜெயலலிதா.

நான் தூய தொண்டாக இருந்து உழைத்து வருகிறேன். ஓ.பன்னீர்செல்வத்தின் வரலாறும், என் வரலாறும் தொண்டர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும். நான் சொத்து சேர்த்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் மிரட்டி பார்க்க வேண்டாம். திறந்த கதவோடு எத்தனை சோதனைக்கும் நான் தயாராக உள்ளேன். ஓபிஎஸ் வீட்டிலும், எனது வீட்டிலும் சொத்து குவிப்பு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஒரே நேரத்தில் சோதனை நடத்தட்டும். எனது வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கண்டறியப்பட்டால், நான் பொது வாழ்க்கையிலிருந்து விலகிவிடுறேன். அவர் சொத்து குவித்ததாக அறிந்தால் ஓபிஎஸ் பொது வாழ்க்கையில் இருந்து விலக தயாரா? நான் கட்சி நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் பேசி வருகிறேன். என்னை மிரட்டி பார்க்கும் ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிட்டால் ஓபிஎஸ் வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்படும்”. இவ்வாறு அவர் பேசினார்.