தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்ற குஷ்புக்கு, கடந்த இரு தினங்களாகவே கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. அதனை அவர் பொருட்படுத்தாத நிலையில், நேற்றிரவு உடல்நிலை மோசமாகியுள்ளது. இதனையடுத்து அவரது உதவியாளர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். உடல் நிலை கடுமையாக பலவீனம் அடைந்து வருகிறது. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடலில் ஏற்படும் அறிகுறிகளைச் சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள், அதனைப் புறந்தள்ளி விடாதீர்கள். கவனிக்காமல் விட்டதால் தான் நான் தற்போது மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளேன். விரைவில் குணமடைவேன் என நம்புகிறேன். ஆனால் அது நீண்ட நாட்களாகும் என்று நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.