டெல்லியில் பாகிரதி விஹார் பகுதியில் இரட்டைக் கொலை நடந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அங்கு சென்று பார்த்தபோது, வயதான தம்பதியர் இருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்திருக்கின்றன. வயதான தம்பதியரை கொன்றுவிட்டு மர்ம கும்பல் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ராதே சியாம் வர்மா என்கிற 72 வயது முதியவரும், அவரது மனைவி வீணா என்கிற 68 வயது மூதாட்டியும் தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கரோல் பார்க் பகுதியில் உள்ள டெல்லி அரசு பள்ளியில் துணை முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வர்மா. கடந்த 33 ஆண்டுகளாக அதே வீட்டில் தான் வசித்து வந்துள்ளனர். முதியவர்கள் இருவரும் வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வந்துள்ளனர். மேல் தளத்தில் அவர்களின் மகன் ரவி ரத்தன் மனைவி மோனிகா வர்மாவுடன் வசித்து வந்திருக்கிறார்.
இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்த இரட்டை கொலை வழக்கில் ரவி ரத்தனின் மனைவி மோனிகாவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மோனிகா வர்மாவுக்கும் வாலிபர் ஒருவருக்கும் கள்ள உறவு இருந்து வந்துள்ளது. காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக மாமனார், மாமியாரைக் கொன்று நகை மற்றும் ரூ.4.50 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். கள்ளக்காதலனையும் அவரது கூட்டாளிகளையும் நள்ளிரவில் வரவைத்து வர்மாவையும் அவரது மனைவியையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இந்த சம்பவத்தை அடுத்து, மோனிகாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அவரது கள்ளக்காதலன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.