மறு அறிவிப்பு வரும் வரை ஈரான், இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருகிறது. ஈரானின் இந்த தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ஈரான் அல்லது இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது .இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம்.
தற்போது ஈரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சம் காரணமாக தூதரக அதிகாரிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி இருப்பதாக இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்ததை அடுத்து, ஈரான், இஸ்ரேல், லெபனான் மற்றும் பாலஸ்தீனியப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று பிரான்ஸ் அரசு தனது குடிமக்களை எச்சரித்தது