தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு போதுமான பாதுகாப்பு புகலிடங்களாகச் செயல்படுகின்றன. அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி மற்றும் அத்தகைய வாய்ப்புகள் கிட்டாத குழந்தைகளுக்கு அவர்களின் நிலை அறிந்து சேவை செய்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய அங்கன்வாடி மையங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வது என்பது மிக முக்கியமானதாகும்.
இவ்வாறு ஆய்வு மேற்கொள்ளும் போது அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை சரியான முறையில் அளவிடவும், அம்மையங்களின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை நல்வழி படுத்திட வழிவகை செய்வதுடன் இதனால் பின்வரும் இனங்களில் கொள்ளப்படுகிறது.
அங்கன்வாடி மைய கட்டட நிலை:
கட்டடத்தின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கட்டடத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, சாத்தியமான அபாயங்கள் அல்லது கட்டமைப்பு சிக்கல்கள் ஆவணப்படுத்தி அதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கழிப்பறை வசதி:
அங்கன்வாடி மையத்தில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமாகவும், தூய்மையாகவும் உள்ளதனை உறுதி செய்ய வேண்டும். மேலும், கிருமி நாசினி தெளித்து பராமரிப்பது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும்.
தண்ணீர் விநியோகம்:
அங்கன்வாடி மையத்திற்குள் பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் விநியோகம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சுத்தமான குடிநீர் குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
புகையில்லா அடுப்பு:
அங்கன்வாடி மையங்களில் எரிவாயு கலன்கள் மூலம் உணவு சமைப்பதை உறுதி செய்ய வேண்டும். புகையில்லா சமையல் சுவாச பிரச்சனைகளை தடுக்கவும். ஆரோக்கியமான சூழலை பராமரிக்கவும் வழி வகுக்கும்.
அங்கன்வாடி மைய சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் அது குறித்தான ஓவியங்கள்:
பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குழந்தை ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் அது குறித்தான ஓவியங்கள் வர்ணம் தீட்டி இடம் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு அளித்தல்:
3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உணவு உட்கொள்வது மற்றும், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை உறுதி செய்திட வேண்டும்.