ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “உதயநிதி நாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கிய நிலையில், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.
இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ‘ஏஞ்சல்’ படத்தை நிறைவு செய்யாமல், ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ள உதயநிதி, ‘அந்த படமே தனது கடைசி படம்’ என கூறியுள்ளார். ‘ஏஞ்சல்’ படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ‘ஏஞ்சல்’ படத்தை முடிக்காமல் ‘மாமன்னன்’ படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும்.
ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார். ‘ஏஞ்சல்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும். 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். அதுவரை ‘மாமன்னன்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டுமென” அவர் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால், ‘மாமன்னன்’ திரைப்படம் திட்டமிட்டப்படி வரும் ஜூன் 29-ம் தேதி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.