இஸ்ரேல்- ஹமாஸ் போர் உச்சமடைந்துள்ள நிலையில், கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதிக்கு உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பலை அனுப்பி அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ளதாக ஈரான் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.
ஜெர்மன் தாக்குதலிலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் காசா, வெஸ்ட் பேங்க் போன்ற சில இடங்களை தவிர மொத்த பாலஸ்தீனத்தையும் யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கிக்கொண்டனர். பாதிப்படைந்த பாலஸ்தீனர்கள் தற்போதுவரை இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தும் ஹமாஸ் அமைப்பு நடத்திய சமீபத்திய தாக்குதலையடுத்து, இஸ்ரேலும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்த போர் ஒருவாரத்திற்கும் மேல் நடந்துவரும் நிலையில், அந்த பிராந்தியம் முழுக்க பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. . ஏற்கனவே, அரபு நாடுகள் ஹமாஸ் படைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அதேநேரம் உலக வல்லரசான அமெரிக்கா எப்போதும் போல இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இந்தநிலையில், பாலஸ்தீன் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்தால், உலகெங்கும் இருக்கும் முஸ்லிம்கள் ஒன்றிணைவார்கள். அப்போது அதை யாராலும் எதிர்கொள்ள முடியாது. காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நிறுத்த வேண்டும் என்று ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். இவரை தொடர்ந்து, இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா ஏற்கனவே ராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ளதாகவே ஈரான் கருதுகிறது. இஸ்ரேலால் அரங்கேற்றப்படும் இந்த கொடூர குற்றங்கள் அமெரிக்காவின் ஆதரவுடன் தான் நடத்தப்படுகின்றன. இதற்கு அமெரிக்காவும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி கூறினார். மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஏற்கனவே உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பலை அமெரிக்கா கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதிக்கு அனுப்பிவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இருப்பினும், மற்றொரு விமானம் தாங்கி போர்க் கப்பலையும் அப்பகுதிக்கு விரைவில் அமெரிக்கா அனுப்ப உள்ளது. இதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உறுதி செய்துள்ளார். பதற்றத்தை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அமைதியை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவங்களால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளனர்.