Israel – Hamas attack: முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையிலும், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 5 பேர் குழந்தைகள் என்றும், 12 பெண்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும் காசா முழுவதும் நேற்று இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்குமிடம் தற்காலிக கூடாரங்கள் மீது அதிக தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பகுதிகள் மீது காசாவிலிருந்து ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் சுமார் 10 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. கடலோர இஸ்ரேலிய நகரமான அஷ்டோட்டை நோக்கி சரமாரியாக ராக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது. ராக்கெட் தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மத்திய காசாவில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் கட்டாய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று டிரம்பை சந்திக்க உள்ள நிலையில் மறுபுறம் காசாவில் பெண்கள், குழந்தைகள் தங்கியிருக்கும் தற்காலிக தங்குமிடங்கள் குறிவைக்கபடுவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.