Israel airstrikes: 2 கட்ட போர்நிறுத்தம் குறித்து பேச்சு நடந்து வரும் நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
கடந்த 2023ம் ஆண்டும் அக்டோபரில் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால் இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜன., 19 முதல் 42 நாட்களுக்கு முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமல் செய்யப்பட்டது.
அப்போது, இரு தரப்பிலும் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டின. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு நடந்து வருகிறது.
இந்நிலையில், காசா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. வடக்கு காசா, காசா நகரம் மற்றும் டெய்ர் அல் – பலா, கான் யூனிஸ் மற்றும் காசா முனையின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளிலும், ரபா நகரிலும், இஸ்ரேல் விமானங்கள் வான்வழி தாக்குதல்கள் நடத்தின. இதில், போரில் எஞ்சியிருந்த சில இடங்கள் அடியோடு அழிந்தன. பிரதான கட்டடங்கள் சேதமடைந்தன. அகதிகள் அதிகம் இருந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதால், பெண்கள், குழந்தைகள் உட்பட 413 பாலஸ்தீனியர்கள் இந்த தாக்குதலில் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகியான முகமது அபு வட்பாவும் பலியானார். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ரபாவில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பலியானதாக, பாலஸ்தீன நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாததால் தான் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். வெள்ளை மாளிகை, இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு ஆதரித்து, ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது. ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் இரண்டு டஜன் இஸ்ரேலிய பணயக்கைதிகளின் கதி என்ன என்பது குறித்தும் இது கேள்விகளை எழுப்பியது, அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. நெதன்யாகு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகவும் ஹமாஸ் குற்றம் சாட்டியது.