ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 29ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்கு இதுவரை 14 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது 5ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் உள்பட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வரைச் சந்தித்து 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி வழங்கினார். இந்நிலையில், ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து அதன் மீது விவாதித்து நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.