கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், கணவனே கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.. தலைமறைவான கணவனை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த 37 வயதாகும் ஷாஜன், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏலம் விடும் தொழில் செய்து வருகிறார்.
ஷாஜனுக்கும், சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த 31 வயதாகும் ஷானிகா என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
இதற்கிடையே ஷாஜன் தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவி ஷானிகாவுடன் தகராறில் ஈடுபட்டு வருவாராம். அத்துடன் குடித்துவிட்ட ஷானிகாவை அடிக்கடி அடித்து உதைப்பாராம்.
சம்பவம் நடந்த அன்று ஷானிகா திடீரென மயக்கம் போட்டு வீட்டில் விழுந்து கிடப்பதாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் ஷானிகாவின் பெற்றோருக்கு ஷாஜனின் சகோதரி தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷானிகாவின் பெற்றோர் நித்திரவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கதறி அழுதபடி வந்துள்ளனர். அங்கு ஷானிகாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனிடையே ஷானிகாவின் கழுத்து மற்றும் கால் பகுதிகளில் காயம் இருப்பதை ஷானிகாவின் பெற்றோர் கண்டார்கள்.. உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஷானிகாவின் தந்தை போலீசில் நேரடியாக புகாரும் கொடுத்தார். அந்த புகாரில் என்னுடைய மகள் சாவில் சந்தேகம் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதே சமயத்தில் ஷானிகாவின் கணவர் ஷாஜன் தலைமறைவாகி விட்டார்.
இந்த பரபரப்புக்கு இடையே ஷானிகாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் ஷானிகாவின் கழுத்து எலும்பு உடைந்திருப்பது உறுதியானது. இதனிடையே போலீசார், ஷானிகா தூக்கில் தொங்கினாரா? என்பது குறித்து வீட்டில் ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆனால் அதற்கான தடயங்கள் இல்லததால், கழுத்தை நெரித்து ஷானிகா கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர். இதனிடையே தலைமறைவான ஷாஜனை பிடிக்க 2 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.. அவர் பிடிப்பட்டால் உண்மை தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.