கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடை ஒன்றில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் நாய்க்குட்டியை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பனங்காட்டில் வளர்ப்பு பிராணிகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார் பஷீத். அப்போது இவரது கடைக்கு தங்களது பூனையை விற்பனை செய்வதற்காக கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த ஒரு கல்லூரி மாணவனும் மாணவியும் வந்துள்ளனர். பூனையை காணவில்லையே என்று கேட்டுவிட்டு கடையை சுற்றிப் பார்ப்பது போல் பார்த்து விட்டு சென்றுள்ளனர். இவர்கள் சென்ற பின்பு தான் அதன் உரிமையாளருக்கு தெரிந்திருக்கிறது தன் கடையில் இருந்த விலை மதிப்புமிக்க ஷிஹ் சூ என்ற இனத்தைச் சார்ந்த நாய்க்குட்டியை காணவில்லை என்று. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக சிசிடிவி காட்சிகளை பரிசோதித்துப் பார்த்தபோது அந்த இளைஞர் தனது ஹெல்மெட்டுக்குள் பிறந்து 45 நாட்களேயான நாய்க்குட்டியை ஒளித்து வைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இது தொடர்பாக அவர் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறை இந்த வழக்கில் மெத்தனப்போக்கு காட்டி வந்தது. இதே ஜோடி இன்னொரு வளர்ப்பு பிராணி கடைக்கு சென்று அங்கு இந்த நாய்க்கான உணவினை திருடியுள்ளனர் அப்போது அந்த கடைக்காரர் இவர்களை கையும் களவுமாக பிடித்து விட்டார்.
பின்னர் அவர்கள் தங்களது யுபிஐ மூலம் பணம் செலுத்தி விட்டு சென்றுள்ளனர். இதன் மூலம் காவல்துறைக்கு துப்பு கிடைத்ததை அடுத்து கடையில் திருடி சென்றவர்களை பற்றிய அடையாளம் மற்றும் அவர்களது முகவரி தெரிந்தது. இதனைத் தொடர்ந்து கிடைத்த தகவல்களை வைத்து தேடிய காவல்துறை கடையில் நாய்க்குட்டியை திருடி சென்றவர்கள் கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்தவர்கள் என கண்டறிந்தனர். இந்த விசாரணையில் அந்த மாணவனின் பெயர் நிகில் என்பதும் அந்த மாணவியின் பெயர் ஸ்ரேயா என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் உடுப்பிலிருந்து கொச்சி வந்திருக்கின்றனர். இந்த தகவல்களின் அடிப்படையில் உடுப்பி சென்ற கேரள போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஷிஹ் சூ நாய்க்குட்டியை மீட்டு அதன் உரிமையாளரான பஷீத்திடம் ஒப்படைத்தனர்.