தருமபுரி மாவட்டம் செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவர், தருமபுரியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, இருவரையும் போலீசார் தேடி வந்தனர். கார்த்திக்கின் செல்போன் நம்பரை வைத்து தேடும்போது, இருவரும் திருப்பூரில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், இருவரையும் தருமபுரிக்கு அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவிக்கு ஆசைவார்த்தை கூறி, கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையும் செய்ததாக, கார்த்திக் மீது தருமபுரி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் மற்றும் பெண் கடத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.