அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த எஸ். ரவீந்திரனின் சகோதரி மகனுக்கு, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு பின்னர் ஏமாற்றியதாக அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய் நல்லதம்பி மற்றும் மாரியப்பன் ஆகியோருக்கு எதிராக கடந்த 2021ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில், பிணையில் வெளியே வந்தார். விசாரணையில், ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 33 பேரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்திருப்பது அம்பலமானது. இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பான மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. தற்போது, இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, விரைவில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.