போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில், கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மத்திய, மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் முதற்கட்டமாக 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவில் போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்தது தெரியவந்ததை அடுத்து 18 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் 203 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர். இதில் பெரும்பாலான நிறுவனங்கள் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவை என தெரிகிறது. அங்கு மட்டும் 70 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் (45) மற்றும் மத்தியப் பிரதேசம் (23) அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும், வரும் நாட்களில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.