டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அந்த ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2024 செவ்வாய் கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறதுஇதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 14-12-2024 அன்று வேலை நாளாக இருக்கும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு தூய சவேரியார் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24-ம் தேதி முதல்- டிசம்பர் 3ம் தேதி வரையிலான 10 நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது. இத் திருவிழாவின் இறுதி நாளன்று கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு தமிழக அரசால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. 03.12.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 டிசம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (14.12.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 03.12.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.