தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடக்கு அழகு நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகா கிருஷ்ணன். இவரின் மனைவி கனகா தேவி. இந்த தம்பதிக்கு முத்துலட்சுமி (14), கவின் (7) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். கனகா தேவியும்-மஹாகிருஷ்ணனும் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி ஆவார். வேன் ஓட்டுநரான மகா கிருஷ்ணனுக்கு தான் வசித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் கள்ள உறவு கனகா தேவிக்கு தெரியவந்ததும், அவர் கணவனை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த தகராறு முற்றியதை அடுத்து வீட்டில் இரண்டாகப் பிரித்துக் கொண்டு தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று மதியம் கனகா தேவிக்கும் மகா-கிருஷ்ணனுக்கும் இடையே மீண்டும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு மனைவியை வெட்ட ஓடியிருக்கிறார். இதை சுதாரித்துக் கொண்ட கனகா தேவி, வீட்டில் கதவை திறந்து கொண்டு வெளியே தோட்டத்துக்குள் ஓடி இருக்கிறார். ஆனால் ஓட ஓட அவரை துரத்திச் சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறார் ..
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குருவிக்குளம் போலீசார் நேரில் வந்து கனகா தேவியின் உடலை மீட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதன்பின்னர் படுகொலை குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் கொலையாளி யார் என்பது குறித்த மர்மம் நீடித்திருக்கிறது. பின்னர் போலீசாருக்கு கனகா தேவியின் கணவர் மீது சந்தேகம் வந்திருக்கிறது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போது தான் தனக்கு இருந்த கள்ளத்தொடர்பை மனைவி அடிக்கடி கண்டித்து வந்ததால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.